பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

எனது குறுங்கவிதைகள் இங்கே.......................



நட்புக் கவிதைகள்

ஒட்டமுடியாத துருவங்களாய்
ஒட்டிக்கொண்டு வாழ்வாயா?

காதல் என்கிறாய்!
என் விழியைத் திருடி,
நட்பு என்றாய்,
மொழியை வருடி,

அதரத்தின் பாஷைகள்
அறியாமல் போனதினால்
அறியாமல்
ஆழத்தோண்டுகிறாய்
அன்புக் கிணறு.
அன்பு நண்பனே!
அகழி என்று வெட்டுவது சரிதான்
அது நீர்க்குமிழிதான்...
அன்றி, வெட்டுவது நிறுத்து.
அன்பை நட்பாலே பொருத்து...


--------------------

வெகுதொலைவில் எங்கோ
சென்றுகொண்டிருக்கும்
எந்தன் பூவின் வாசனை நுகர்ந்து
என் காதருகே சொல்கிறாய்
"போய் வருகிறேன் தோழி!!!"

கவிதை எழுதத்தெரியாது என்று
கவிஞனின் பொய்யாய் பொய்கிறாய்
ஒரு வரியில் சொன்னது என்னவாம்?


----------------------------


கொய்தது பிச்சி @ 6:52 AM, ,




நட்புக் குறுங்கவிதை

விழி ரேகைகளின்
மெல்லிய இடைவெளியில்
நம் இமைகளின் படபடப்பில்
வீழ்ந்து தவிக்கிறது
நட்பு

----------------------

கருவிழி வளையங்களின்
பார்வைக் கணைகளைத்
தாங்கித் தாங்கியே ஆனாலும்
நெஞ்சு நிமிர்ந்து
நடக்கிறது
என் காதலை மீறிய நட்பு.

---------------------

நெருக்கமான ரேகைகளைப் போல்
பிணைப்பே
உண்மையான நட்பு

----------------

மிஞ்சத் தூண்டுதா நட்பு?
கெஞ்சத் தோன்றுதா நட்பு?
வஞ்சத்தை எறியுமே நட்பு
நெஞ்சத் தகநக நட்பு

---------------------

ஏதாவது ஒரு மரத்தின்
நுனிக் கிளையில் அமர்ந்து கொண்டு
முல்லைக் கதைகள் பேசி,
கைகோர்த்து, இலைகளை உதிர்த்து
பூக்களை சபித்து,
பிழை கருதி நெருக்கமின்றி
மரப்பட்டைகளை உரித்தவாறு
கணைகளை நீக்கி
என் விழிகளின் வழி
என் உள்ளம் சென்று
காணுவாய்!

உன் உயிர் அங்கே தூங்கிக் கொண்டிருக்கும்
மீண்டும் வந்துவிட்டு என்னோடு பேசுவாய்
கை கோர்ப்பாய்!
உள்ளத்தில் என்றென்றும் உன்னை
தூக்கத்திலேயே வைத்திருக்கிறேன்,,, நண்பா!
விழித்துவிட்டால் இதயத்தை நோண்டுவாய் என்று!!!



கொய்தது பிச்சி @ 6:39 AM, ,




நட்புக் கவிதை

அதிரவைக்கும் பூப் பிரசவத்திற்கும்
அழகுபடுத்தும் வண்டொலிக்கும்
இடையில்
இழைந்தோடுமே
நட்பு

----------------------

மகிழம்பூ வாசனை நெடியில்
தேன் கலந்த
இனிமையான துகள்களின்
ருசியே உனக்கும் எனக்கும்
உண்டான நட்பு

------------------

விழுதினைப் போல
விழுகாது இருக்கும்
விருப்பமான நட்பு.

------------------

பருக்கையின்
பிளவுக்குள்ளே
பொத்தி வைக்கப்பட்டிருக்கும்
அரூப அன்பே
காரணமில்லா நட்பு


--------------

ஒரு கை மண்ணின்
எண்ணிலடங்கா துகள்களில்
ஒளிந்திருக்கும் காந்தமே
உலகத்தில்
உலாவும்
உன்னதமான நட்பு


--------------

தென்னங்காயைப் போல்
இளமையாயும்
தேங்காயைப் போல்
வலிமையாயும்
இளநீரைப் போல்
இனிமையாயும்
இருப்பதுவே
நட்பு


----------

தெள்ளிய நீரினில்
பாறாங் கல்லைப் போட்டாலும்
கலங்காமல் இருக்கும்
உண்மையான நட்பு


கொய்தது பிச்சி @ 9:15 AM, ,